அன்னூர் ஒன்றியம், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி, பட்டக்காரன்புதூரில் மழை வேண்டி தவளைகளுக்கு வெள்ளிக்கிழமை பெண்கள் திருமணம் செய்து வைத்தனர்.
பட்டக்காரன்புதூரில் மழை வேண்டி அரசமரத்து விநாயகர் கோயிலில் தவளைகளுக்கு பெண்கள் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் மக்கள் இணைந்து நாகஸ்வரம், மேள தாளங்களுடன் சீர்வரிசைப் பொருள்களை விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும் மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது: மழை இல்லாமல் வறட்சி நிலவும் காலங்களில் ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
மேலும், கடந்த காலங்களில் இதுபோன்று தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு மழை பெய்துள்ளது. திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகளை மழை பெய்யும் வரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் கட்டி வைப்பது வழக்கம்.
தினமும் மாலை நேரத்தில் தண்ணீரில் சிறிது நேரம் தவளைகளை விட்டு மீண்டும் அதே தாழ்வாரத்தில் கட்டி வைப்போம். மழை பெய்யும் வரை இதேபோல் தினமும் செய்யப்படும். மழை பெய்த பிறகு தவளைகள் விடுவிக்கப்படும் என்றனர்.