சூலூர் அருகே கலங்கல் பிரிவில் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சூலூரை அடுத்த காசிகவுண்டன்புதூர் பகுதியில் சூலூர் போலீஸார் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, கலங்கல் பிரிவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் போதையில் அப்பகுதியில் சாலையில் வரும் பொதுமக்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. விசாரணையில், கலங்கல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (23), சூலூரைச் சேர்ந்த சக்திவேல் (27), நாகராஜ் (21), அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தியாகராஜ் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 200 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.