புதர்மண்டிக் கிடந்த மயானப் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து சிறுத்தையைப் பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள மயானத்தில் செடிகள் வளர்ந்து புதர்போல காட்சியளித்து வந்தது. இதனால், இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, மயானத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் மயானத்தில் வளர்ந்திருந்த செடி, புதர்களை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செடிகளுக்கு இடையே மறைந்திருந்த சிறுத்தை ஒன்று தொழிலாளர்களைப் பார்த்து அங்கிருந்து ஓடியுள்ளது.
சிறுத்தையைப் பார்த்த தொழிலாளர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.