மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை ஓட்டி அறநிலையத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் 28 ஆம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 15 நாள்கள் விழா நடைபெறுகின்றன.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கோயில் செயல் அலுவலர் செ.வ.வர்ஷினி பிரியா, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பக்தர்கள் வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்ய வசதியாக கூடுதல் பூசாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் வனத் துறை, நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை, மினவாரியம், குடிநீர் வடிகால் வாரியம், தீயணைப்புத் துறை, பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, கோவை வடக்கு மாவட்ட கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் சாந்தாமணி, பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வனச் சரகர் செல்வராஜ், காரமடை ஆய்வாளர் பாலசுந்தரம், தேக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.