கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நகல் பரிசோதகர், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 நகல் பரிசோதகர் / நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர்கள், 16 காவலர்கள், 4 துப்புரவுப் பணியாளர்கள், 5 தூய்மைப் பணி செய்பவர்கள், 10 மசால்சி (அலுவலக உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற வலைதளமான districts.ecourts.gov.in/coimbatore இல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்பிக்க ஜூன் 28 ஆம் தேதி இறுதி நாள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.