சர்வதேச அளவிலான புலமையை வெளிப்படுத்தும் தேர்வில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
இது குறித்து சயின்ஸ் ஒலிம்பியாட் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:
சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் திறன், புலமை மேம்படுத்தும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 30 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 50 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றதில், ஆங்கிலப் புலமைத் தேர்வில் சி.எஸ். அகாதெமி பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஸ்ருதி சீனிவாசன் தங்கம் வென்றார்.
சர்வதேச கணித புலமைத் தேர்வில் வித்ய விஷ்வாலயா குளோபல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் தரண் கிருஷ்ணன், மாணவி தக்ஷிதா ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளது. தில்லியில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.