மேட்டுப்பாளையம்- சமயபுரம் பகுதியில் குடியிருப்பில் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றை யானையைக் கண்டு கிராம மக்கள் ஓட்டமெடுத்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதியான நெல்லிமலையில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சாலைகளைக் கடந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நெல்லிமலை வனப் பகுதியில் இருந்து புதன்கிழமை இரவு விவசாய நிலங்களில் புகுந்த ஒற்றை யானை பவானி ஆற்றை நோக்கிச் சென்றது.
அன்று இரவு முழுவதும் ஆற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நடமாடி, உணவு உட்கொண்ட யானை வியாழக்கிழமை காலை மீண்டும் நெல்லிமலைக்குத் திரும்பியது. அப்போது வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள சமயபுரம் கிராமத்தில் ஒற்றை யானை நுழைந்தது. பிளிறலுடன் உலவிய யானையைக் கண்ட மக்கள் அலறிஅடித்துக் கொண்டு ஓடினர்.
எனினும் யாரையும் துன்புறுத்தாத அந்த ஒற்றை ஆண் யானை, சாலையில் சிறிது நேரம் நின்று வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து விட்டு மீண்டும் நெல்லிமலை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.