கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கண்ணதாசன் கழகமும் இணைந்து நடத்தும் 12-ஆம் ஆண்டு கண்ணதாசன் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கண்ணதாசன் கழகமும் ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவையொட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், திரைக் கலைஞர்கள், பதிப்பாளர்களுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
இதுவரை எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சிற்பி, மாலன், கலாப்ரியா, அமுதோன் ஆகியோருக்கும், டி.ஆர்.எம். சாவித்திரி, சீர்காழி சிவசிதம்பரம், ராமு முத்தையா, பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன், முத்துலிங்கம், வாணி ஜெயராம், பி.சுசீலா, பஞ்சு அருணாசலம், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கும் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது, பாராட்டுப் பட்டயத்துடன் ரூ. 1 லட்சம் ரொக்கம் கொண்டது. இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாடகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கோவை, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) மாலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஆர்.வி.ரமணி தலைமை வகிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், இசைக்கவி ரமணன், எழுத்தாளர் அராத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.