மூதாட்டியிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை
By DIN | Published On : 19th June 2019 09:21 AM | Last Updated : 19th June 2019 09:21 AM | அ+அ அ- |

மூதாட்டியிடம் நகைப் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோவை, காளப்பட்டி சாலை, நேரு நகரைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (60). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவ்வழியே நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சின்னம்மாளின் கழுத்தில் இருந்த மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக சின்னம்மாள் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம், வேம்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் (30), கோவை, ஒண்டிப்புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (42) ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் மன்றத்தில் (எண்.2) விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார். மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித் துறை நடுவர் என்.ஞானசம்பந்தம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.