நிறுவனக் கணக்குகளை மோசடியாக திருத்தி ரூ.5 கோடி கையாடல் செய்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார் (47). இவர் அதே பகுதியில் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் செயல் இயக்குநராக சிதம்பரம் (46), கொள்முதல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக முரளி (36), காசாளராக செல்வகுமார் (32) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிவக்குமார், தனது நிறுவனக் கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். அதில் கோடிக்கணக்கான பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. விசாரித்ததில் சிதம்பரம், முரளி, செல்வகுமார் ஆகிய மூவரும் சேர்ந்து நிறுவனக் கணக்குகளை மோசடியாகத் திருத்தி ரூ.5 கோடிக்கு மேல் கையாடல் செய்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் சிவக்குமார் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.