கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்காக பொம்மலாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
கோவை, மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வியோடு சேர்த்து சமூக ஆர்வலர்கள் மூலமாக ஓவியம், அபாகஸ், கராத்தே, நடனம் உள்ளிட்ட தனித் திறன் பயிற்சிகள் கற்பிக்கப்படுகின்றன.
காப்பீடு வசதி, இணைய வசதி கொண்ட இப்பள்ளியின் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பிரபலமானது.
இதன் எதிரொலியாக நடப்பு கல்வியாண்டில் 180 மாணவர்கள் இப்பள்ளியில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், பள்ளிகளில் பழங் கலைகளைக் கற்பிக்கும் பொருட்டு பொம்மலாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை க.மைதிலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனிவாசன் பள்ளிப் பாடத்திட்டத்தில் உள்ள பாடல்கள், கதைகளை பொம்மலாட்டம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தார். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.