பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரத்தில் வரையாடு உயிரிழந்துள்ளது.
தமிழகத்தின் மாநில விலங்காக நீலகிரிதார் எனப்படும் வரையாடு உள்ளது. வரையாடுகளை பொருத்தவரை மிகவும் உயரமான பாறைகளில் வாழும் உயிரினம். மனிதர்கள் வரையாட்டை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 7, 8, 9 ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரத்தில் வரையாடுகள் எப்போதும் தென்படும். இதனால், வரையாடுகள் தென்படும் பகுதிகளில் வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஆண் வரையாடு ஒன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தது. இரண்டு வரையாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வரையாடு உயிரிழந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.