மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 3 நாள்களில் பொதுமக்களிடம் இருந்து 886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. கோவை வடக்கு கோட்டாட்சியர் டெய்ஸிகுமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
முதல் நாளில் 215 மனுக்களும், 2 ஆவது நாளில் 92 மனுக்களும் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நடந்த ஜமாபந்தியில் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் புனிதா வரவேற்றார்.
இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 579 மனுக்கள் பெறப்பட்டன. 3 நாள்கள் நடந்த ஜமாபந்தியில் இதுவரை 886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஜூன் 25 ஆம் தேதி இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, மூடுதுறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.