வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமை வகித்தார். கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வால்பாறை பகுதியில் நகராட்சி மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஒப்பந்தம் எடுத்தும் பணியை துவங்காமல் இருக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பது, டேன் டீ, வேவர்லி உள்ளிட்ட எஸ்டேட் சாலைகளை உடனடியாக சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தின்போது பொதுமக்களிடம் இருந்து எம்எல்ஏ கஸ்தூரி வாசு மனுக்களைப் பெற்றார்.