கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கு வருவாய், சமூக நலத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.
கோவை, பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அனுமதி பெறமால் விடுதிகளாக நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் மனு திங்கள்கிழமை அளித்திருந்தனர்.
அதில், கோவை, பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இதில் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் ஒரே அறையில் தங்கிக்கொள்ளும் வசதியுள்ளதாக இணையதளங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். பொள்ளாச்சியில் பண்ணை வீடுகளினால் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறின. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். இது போன்ற சம்பவம் இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் உத்தரவின்பேரில் கோவை (தெற்கு) வட்டாட்சியர் தேவநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் தங்கமணி ஆகியோர் போலீஸார் பாதுகாப்புடன், பீளமேடு பகுதியில் உள்ள குறிப்பிட்ட தனியார் விடுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். இதில் உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து விடுதிக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.