கருவூலத் துறையில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வே.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கு கருவூலத் துறை மூலம் சம்பளம், ஓய்வு ஊதியம் உள்பட அனைத்து பணப் பலன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தந்த அலுவலகம் சார்பில் வழங்கப்படும் பட்டியல் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பின் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தனியார் நிறுவனம் சார்பில் கையாளப்பட்டு வருவதால் அரசு ஊழியர்களின் தகவல்கள் தனியார் நிறுவனத்திடம் செல்லும் வாய்ப்புள்ளது.
மேலும் இத்திட்டத்தில் சர்வர் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதல் தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் அதிகமாகிறது. மேலும் வரும் காலங்களில் புதிய திட்டத்தால் கருவூல கணக்குத் துறையின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இத்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சு.குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.