காரமடையில் பாழடைந்த கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே கோவை சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியை அடுத்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் பாழடைந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது கிணற்றில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி வருவாய் ஆய்வாளர் தனசீலன், காரமடை போலீஸாருக்கு புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த காரமடை போலீஸார், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் விவரம் தெரியவில்லை. காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.