பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் சமூக வலைதளத்தில் பள்ளி மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்ட 5 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது நியாஸ் (19), வசந்தகுமார் (21), முகமது அர்ஷத் (21), கமர்தீன் (19), முகமது சபீர் (21). நண்பர்களான இவர்கள் 5 பேரும் டீக்கடை, பேக்கரி, தள்ளுவண்டிக் கடை போன்ற வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஐந்து பேரும் சேர்ந்து பள்ளி மாணவிகள் சிலரின் புகைப்படங்களை எடுத்து அவர்களுக்கு தெரியாமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர், அந்த இளைஞர்களிடம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டது குறித்து கேட்டுள்ளனர். இதனால் மாணவிகளின் பெற்றோரை 5 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆனைமலை போலீஸார் வழக்குப் பதிந்து முகமது நியாஸ் உள்ளிட்ட 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவர்களில் முகமது சபீர் மட்டும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.