பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு தர மறுத்த மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், சிறுமுகையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (51). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (45). இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் பணியாற்றி வந்துள்ளார். வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் தம்பதிக்கு இடையே அடிக்கடித் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் 2018 மே 20ஆம் தேதி மது அருந்துவதற்காக வேல்முருகன் பணம் கேட்டுள்ளார். சுப்புலட்சுமி பணம் தர மறுத்ததையடுத்து அவரை வேல்முருகன் தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், வேல்முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எம்.குணசேகரன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.