மதுக்கரை வருவாய் வட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில் 174 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
மதுக்கரை வருவாய் வட்டத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ம.பழனிசாமி, நலிந்தோர் நலத் திட்ட தனி வட்டாட்சியர் சரண்யா, குடிமைப் பொருள் வட்டாட்சியர்கள் (தனி) சந்திரா, விமலா, துணை வட்டாட்சியர் ஜெயகுமார், செந்தில்குமார், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுக்கரை, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், நில அளவை, குடும்ப அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 668 மனுக்களை அளித்தனர். இவற்றில் 174 மனுக்கள் துறை ரீதியான நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டன. இதர மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் தெரிவித்தார்.