கோவையில் இருந்து சேலம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் பல்வேறு சிரமங்கள் நிலவுவதாக பயணிகள் சார்பில் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் இருந்து சேலம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் பயணிகளின் இருக்கை தரமாக உள்ளதா, கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ரயிலில் பயணித்தவர்களிடமும் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை நடத்தினர். ரயிலில் சமையல் செய்யும் இடத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் உணவின் தரம், எடை ஆகியவற்றை சரிபார்த்தனர்.
இந்த ஆய்வின்போது, பயணிகளுக்கான மகளிர் உதவி மையம், கோச் மித்ராஸ் (ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வது) பாதுகாப்பு குறித்த உதவிகள், அவசரத் தேவைகள் குறித்தும், உதவி மையங்கள் குறித்தும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், முன்பதிவில்லா பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு செல்லிடப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து, வரிசையில் நிற்பதைத் தவிர்க்க பயணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை கூறுகையில்,
"ரயில்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் இனி தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். பயணிகள் குறைகள், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார்.
ஆய்வின் போது முதுநிலை மின் பொறியாளர் அரவிந்தன், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் முகுந்தன், பாதுகாப்பு பிரிவு அலுவலர் கோபி சந்தரா நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.