கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பி.கே.புதூர் பகுதியில் ரூ. 49.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாக முடிக்குமாறு ஊழியர்களிடத்தில் வலியுறுத்தினார்.
இதேபோல், 17 ஆவது வார்டு, கவுண்டம்பாளையத்தில் பழைய குப்பைக்கிடங்கு வளாகத்தில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் ஆகியவற்றை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் புல் மேடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, பி.கே. புதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ வசதிகள் குறித்தும், சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள நாய்கள் காப்பகத்தில், நாய்கள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.