கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (50). அங்குள்ள சேரம்பாடி பகுதியில் சாராயம் விற்பனை செய்ததற்காக போலீஸார் இவரைக் கைது செய்து கூடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை கோவை சிறைக்கு மாற்றுவதற்காக போலீஸார் கடந்த 16 ஆம் தேதி அழைத்து வந்தனர். அப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயன் ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான சிறப்புப் பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.