வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் செல்வதீபா முன்னிலை வகித்தார்.
சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. டூரிஸ்ட் கார்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். வெளியூர்களில் இருந்து வந்து வாடகைக்கு கார்கள் எடுப்பவர்களின் முழு விலாசத்தையும் ஓட்டுநர்கள் வாங்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனை கடைப்பிடிக்க தவறும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், திரளான டூரிஸ்ட் கார் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.