திண்டுக்கல்லில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 65 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மூன்று பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார், திருச்சி சாலை கம்போடியா மில் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவர்களிடம் ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள 65 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருதகோட்டை (40), பால்பாண்டி (34), வேல்முருகன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.