பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீபூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கருடக் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீபூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோயிலில் மார்ச் 16 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.
பின்னர் ஸ்ரீகருடாழ்வாருக்கு அபிஷேக அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட கருடக் கொடி கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலின் தலைமை அர்ச்சகர் நாராயணன் பட்டாச்சாரியார், வெங்கடரமண பட்டாச்சாரியார் ஆகியோர் தங்கக் கொடி மரத்தில் ஏற்றினர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள், சரஸ்வதி அலங்காரத்தில் அன்னவாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். அப்போது, பாலர் கோஷ்டி, ஆண்டாள் கோஷ்டியினர் வண்ண உடைகள் உடுத்தி பஜனை கோஷ்டியாருடன் பிருந்தாவன நடனமாடியபடி பங்கேற்றனர்.
இதில் முக்கிய நிகழ்வான கருடசேவை வைரமுடி சேவை புதன்கிழமை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.