சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
சூலூர் வட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த வாரப்பட்டி, குளத்துப்பாளையம் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி, செலக்கரிச்சல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அப்பநாய்க்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் உள்ளதா, குடிநீர் , மின்சாரம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆட்சியர் ராசாமணி ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சினேகா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.