பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக பிரமுகர்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாக திமுக வழக்குரைஞர்கள் அணியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
இது தொடர்பாக திமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் மருதராஜ், சிவகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவகாரம் தொடர்பாக பல்வேறு விடியோ, ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி நகர திமுக மாணவரணி உறுப்பினர் மணிமாறன், மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் அதிமுகவினர் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.
இந்த தவறான பதிவுகளால் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் தொடர்ந்து தவறான பதிவுகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.