பொள்ளாச்சி ஆபாச விடியோ சம்பவத்தையடுத்து, தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கி உரிமம் வழங்கக் கோரி கோவையைச் சேர்ந்த சகோதரிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்க வந்தனர்.
கோவை மாவட்டம், நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சகோதரிகள் சா.தமிழ்ஈழம், சா.ஓவியா அகிய இரு மாணவிகளும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். ஆனால், அவர் இல்லாததால் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி ஆபாச விடியோ சம்பவம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையைக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பழகும் நண்பர்கள் மேலே சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மேலும் இச்சம்பவத்தால் பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர். இதனால் நண்பர்களிடம் பழகுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் எங்களை, நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் கேட்டு விண்ணப்பித்து உள்ளோம் என்றனர்.