கோவை இடையர்பாளையம் பகுதியில் புதிய சாலைக்காக தோண்டப்பட்ட இடங்களில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையர்பாளையம் அருகே உள்ள முல்லை நகர், மருத நகர், குறிஞ்சி நகர், நடராஜ் நகர், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட சாலைகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திடீரென தோண்டப்பட்டன. சீரமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை அந்தப் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும், பாதசாரிகள் நடக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஜல்லிக் கற்களுக்கு இடையே சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதால் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.