மேட்டுப்பாளையம் அருகே கன்னார்பாளையம் பகுதியில் மின்விநியோகம் செய்யாததால் கோபமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கன்னார்பாளையம், காவெட்டிபுதூர், சிக்காரம்பாளையம், வடக்கல்லூர் ஏ.டி.காலனி, தெக்கலூர் ஏ.டி. காலனி உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை முதல் மின்சார விநியோகம் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக கிராம மக்கள் மினவாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இரவு வரையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து, கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கன்னார்பாளையம்-கோவை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரமடை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.