வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் 67-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி கோயில் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொடுமுடியில் தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் புதன்கிழமை காலை 10 மணிக்கு கொண்டு வருதல், மாலை 3.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு 7 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன.
அலகு குத்தி பறவை காவடி எடுத்து வருதல், அன்னதானம், திருவிளக்கு பூஜை, அலங்காரத் தேரில் சுவாமி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. அன்று நள்ளிரவு மகா அபிஷேகம் மற்றும் வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.