அன்னூர்-கோவை சாலையில் உள்ள தெலுங்குபாளையம் பிரிவில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து அப்பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தெலுங்குபாளையம் பிரிவில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, மேட்டுப்பாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தெலுங்குபாளையம் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் நிற்காமல் சென்ற பேருந்துகளை நிறுத்தி அதன் ஓட்டுநர், நடத்துநரிடம் தெலுங்குபாளையம் பிரிவில் நிற்காமல் சென்றால் உரிய நடவடிக்கை டுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து தெலுங்குபாளையம் பிரிவில் முறையாக பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதாக பேருந்து ஓட்டுநர்கள் உறுதியளித்தனர்.