மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கோவையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகின்றன.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பறக்கும் படை குழுக்கள் ஆய்வு, தேர்தல் விழிப்புணர்வு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், வாக்களிக்க தயாராவோம், நீங்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களா எழுவீர் வாக்காளர்களாக, உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.