கோவையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.7.21 லட்சத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடா உள்ளிட்டவற்றைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கோவை மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படை அதிகாரி ஜெ.ஷீலா தலைமையிலான குழுவினர் கோவை காந்திபுரம் ஜி.பி. சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. காரில் கோவை சித்ரா பகுதியைச் சேர்ந்த மனோ உள்ளிட்ட இருவர் இருந்தனர். அவர்களிடம் பணம் குறித்த கேட்டபோது, வியாபாரத்துக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.