கோவை சாடிவயல் அருகே காட்டு யானைத் தாக்கியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.
கோவை, சாடிவயல் அருகே உள்ள சப்பாணி மலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி சின்னக்காள் (60). சுப்பையன், தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சின்னக்காள் மின்தடை ஏற்பட்டதால், பின்பகுதியிலுள்ள தோட்டத்தில் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் மலையிலிருந்து தோட்டத்துக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை, அங்கு உறங்கிக் கொண்டிருந்த சின்னக்காளைத் தூக்கி வீசியது. தப்பிக்க முயன்று ஓடியவரை துரத்தி யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சின்னக்காள் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் தகவல் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காருண்யா நகர் போலீஸார், வனத் துறை அதிகாரிகள் சின்னக்காளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.