குடிநீர்ப் பிரச்னை: சமத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சமத்தூர் பேரூராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த  வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி மன்ற

சமத்தூர் பேரூராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த  வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் பேரூராட்சியின் 12 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். 
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் 1,100 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தப் பேரூராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய கம்பாலப்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீர்க் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பில்சின்னாம்பாளையம் பகுதியில் கேட்வால் அமைக்கப்பட்டதால் சமத்தூர் பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவுகுறைந்து விட்டதாக இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பிரதானக் குழாயில் முறையாக தண்ணீர் வராததால் பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் . 
இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்கக் கோரி 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் சாலை மறியல் செய்யப்போவதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாசலம், கோட்டூர் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com