மேட்டுப்பாளையம் அருகே க.புங்கம்பாளையம் கிராமத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்காததால் ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மருதூர் ஊராட்சியில் க.புங்கம்பாளையம் கிராமம் உள்ளது. க.புங்கம்பாளையம, புங்கம்பாளையம் புதூர், குருந்தமலை, குருந்தமலை பிரிவு, கட்டான்ஜி மலை, எம்.ஜி.ஆர் நகர், இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு க.புங்கம்பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2013-14 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ. 7.25 லட்சம் மதிப்பில் க.புங்கம்பாளையத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அதிகாரி சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ரேஷன் கடைக்கு புதிய கட்டடத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. ஆனால் மின் இணைப்பு வழங்காததால் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் இங்கு புதிய ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.