கோவை மாநகர் மற்றும் புறநகரங்களில் புதன்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் இரவில் குளிர்ந்த கால நிலை நிலவியது.
கோவையில், பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்
தொடங்கியது. இதற்கிடையே ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து 5 நாள்கள் கோடை மழை பெய்தது.
அப்போது, வெயிலின் தாக்கம் இருந்தபோதும், மாலையில், குளிர்ந்த சூழல் காணப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து, கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயிலால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வெப்பம் தாங்காமல் பலர் வீட்டிலேயே முடங்கினர்.
இந்நிலையில் மே 4-ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 7 மணி முதல் ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, செல்வபுரம், சூலூர், இருகூர், கருமத்தம்பட்டி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ராமநாதபுரம் உள்பட சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கோவையில் குளிர்ந்த காலநிலை நிலவியது.
கொச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு கோவைக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம், கோவையில் நிலவிய மோசமான வானிலையால், கேரள மாநிலம் கொச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.