கோவை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் ஏ.வி.எஸ்.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை, மலுமிச்சம்பட்டியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள் உள்ளன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவில் பட்டப்படிப்பு பயில பிளஸ் 2 தேர்ச்சியுடன், 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய பரிவுகளில் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 16 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு பி.ஏ. இளங்கலை இசை அல்லது இசைக் கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட இசைப்பிரிவில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாலைநேர வகுப்பில் குரலிசை, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறுவதற்கு ரூ.31 அஞ்சல் ஆணை பெற்றுவர வேண்டும். பி.ஏ.இளங்கலை இசைக்கு ரூ.1,460, பட்டயப் படிப்புக்கு ரூ.750, இசை ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.750, மாலைநேர இசை வகுப்புக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0422-2611196 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.