கோவையில், பலத்த காற்றுடன் பெய்த மழையால் நகரில் மரங்கள் விழுந்து புதன்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
கோவை - திருச்சி சாலையில் சுங்கம் அருகே சாலையில் விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவிநாசி மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் தேங்கி வெள்ளமாக
வழிந்தோடியது. ஆவாரம்பாளையம், புலியகுளம், அத்திப்பாளையம், சரவணம்பட்டி நகரின் சில பகுதிகளில்
இரவு 8 முதல் 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் நள்ளிரவு 12 முதல் 2.30 மணி வரை மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கிடையே, சுங்கம் அருகே மரம் விழுந்த இடத்தையும், மழைநீர் தேங்கிய அவிநாசி மேம்பாலத்தின் கீழ்பகுதியையும் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.