வீட்டுக்கு சொத்து வரி புத்தகம் வழங்க லஞ்சம் பெற்ற கோவை மாநகராட்சி உதவி ஆணையர், தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, கணபதி நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (32). இவர் அதே பகுதியில் முதல் தளம் கொண்ட வீடு கட்டியுள்ளார். அதற்கு சொத்து வரி புத்தகம் பெற மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். சொத்து வரி புத்தகம் வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் தருமாறு உதவி ஆணையர் ரவிகுமார் கேட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.12 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். அந்தத் தொகையை வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த தரகர் பாலகிருஷ்ணனிடம் (59) வழங்குமாறு கூறியிருந்தார்.
இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் குமார் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை குமாரிடம் கொடுத்தனர். அந்தத் தொகையை பாலகிருஷ்ணனிடம் குமார் திங்கள்கிழமை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாலகிருஷ்ணனை கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சத் தொகையை வாங்கக் கூறிய மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் ரவிகுமாரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.