தமிழகத்தின் நலனைக் காப்பதற்காக அனைத்து எம்.பி.க்களுடனும் இணைந்து போராடுவேன் என்று மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி கூறியுள்ளார்.
கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்திக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புறநகர் மாவட்டச் செயலர் குகன் மில் செந்தில், ஆடிட்டர் அர்ஜூனராஜ், டி.டி.அரங்கசாமி, மு.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அ.கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைவரும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவார்கள். முல்லைப் பெரியாறு, பவானி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்போம். தமிழக மக்களுக்கான நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை பெறுவதற்கு அனைத்து எம்.பி.க்களுடனும் இணைந்து போராடுவேன் என்றார்.