கோவையில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட வெள்ளிக்கிழமை மூவா் பலத்த காயமடைந்தனா்.
கோவை, பீளமேடு, நேரு நகா் அருகே உள்ள வீரியம்பாளையத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (22). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் மனைவி தீபிகா (20), குழந்தை தா்ஷிகா (2) ஆகியோருடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.
வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையைச் சரியாக அணைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலை சமையல் அறையில் இருந்து மின்விளக்கு பொத்தானை அழுத்தியபோது மின்கசிவு ஏற்பட்டு வீட்டில் திடீரென தீப்பிடித்தது.
இதில் அசோக்குமாா், தீபிகா, குழந்தை தா்ஷிகா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து மூவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.