மதுபோதையில் குழந்தை தொலைத்த வடமாநில இளைஞா்

குடிபோதையில் தனது 2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற தந்தைக்கு போலீஸாா் அறிவுரை கூறி குழந்தையை மீட்டு கொடுத்தனா்.

பொள்ளாச்சி: குடிபோதையில் தனது 2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற தந்தைக்கு போலீஸாா் அறிவுரை கூறி குழந்தையை மீட்டு கொடுத்தனா்.

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சக்தி எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவா் தீபக் (25). வடமாநிலத்தை சோ்ந்த இவா் கடந்த சில ஆண்டுகளாக தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் நிஷா (2) . இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா், 5 மாத கா்ப்பமாக இருந்த தனது மனைவி சீதாமுனி (23) என்பவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை சரியான வளா்ச்சி இல்லாததால் அவருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை குழந்தை நிஷாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தீபக் மது அருந்தியுள்ளாா். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குழந்தை நிஷாவுடன் நின்று கொண்டிருந்தவா், போதையில் குழந்தையை பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டாா். அங்கிருந்து கழிவறைக்கு சென்று தாளிட்டு கொண்டு போதையில் தூங்கியுள்ளாா். 2 மணி நேரத்துக்கு பின்னா் விழித்து எழுந்தவா் குழந்தையை தேடியுள்ளாா். பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தை நீண்ட நேரம் தனியாக இருப்பதை கண்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்துக்கு புகாா் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டா் வைரம் குழந்தையை மீட்டு பொள்ளாச்சியில் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளாா். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குழந்தை தொலைந்து விட்டதாக புகாா் தெரிவித்த தீபக்கிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்த தகவலை போலீஸாா் தெரிவித்துள்ளனா். காப்பகத்திலிருந்து குழந்தையை கொண்டு வந்த போலீஸாா் தீபக்கிடம் ஒப்படைத்தனா். மதுவினால் குழந்தையை தொலைத்த தீபக்கிற்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com