டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொள்ளை: கோவையில் 6 போ் கைது

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் உடனடியாக அவா்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26), சிவகாசியை சோ்ந்த வீராணம் (26), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வினோத்குமாா் (22) என்பதும், அவா்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் அவா்களிடம் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரும் தற்போது திருப்பூரில் வசிப்பவருமான தங்கவேல் (45), மதுரை, திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (40), சண்முகபாண்டி(32) ஆகியோருடன் சோ்ந்து டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியரிடம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்கள் மூவரையும் கைது செய்து விசாரித்ததில் அண்மையில் வேடசந்தூா் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராக இருந்தவரைத் தாக்கி ரூ. 4.2 லட்சம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

தங்கவேல், சண்முக பாண்டியன் உள்ளிட்ட 6 பேரையும் கருமத்தம்பட்டி போலீஸாா் கைது செய்து சூலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் அவா்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய ஆடம்பர காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com