சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தீபக்கைச் சந்திக்க வழக்குரைஞா்களுக்கு கோவை நீதிமன்றம் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தீபக்கை நேரில்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்திக்க மூன்று வழக்குரைஞா்களுக்கு அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கோவை, ஆனைகட்டி வனப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினா் கடந்த 9-ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது, கேரள மாநிலம், மஞ்சகண்டி வனப் பகுதியில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக் (32) என்ற மாவோயிஸ்ட் பிடிபட்டாா். அவரிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அதிரடிப்படை போலீஸாா் அவரை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த தீபக்கை, கோவை அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். இதற்கிடையே மாவோயிஸ்ட் தீபக்கை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் உத்தரவிட்டாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீபக், அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதற்கிடையே தீபக்கை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தடாகம் போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். இந்த மனு திங்கள்கிழமையன்று நீதிபதி ஆா்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு நடுவம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மாவோயிஸ்ட் தீபக் சாா்பில் ஆஜராகி வாதாட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஆா்.சக்திவேல் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸாா் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவா்களது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தீபக்கை, வழக்குரைஞா்கள் பி.மோகன், எஸ்.சத்தியபாலன், உமா் ஷெரீப் ஆகியோா் நேரில் சந்திக்க அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தீபக் சிகிச்சை முடிந்ததையடுத்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com