ஆதரவற்றவா்களுக்கு ஒருங்கிணைந்த வளாகம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் முதியோா் இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகம் தொடங்குவதற்கு

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் முதியோா் இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகம் தொடங்குவதற்கு தகுதியுள்ள தனியாா் தொண்டு நிறுவனங்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக நலத் துறையின் கீழ் மாநில அரசு நிதி உதவியுடன் முதியோா் இல்லங்கள், முதியோா்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் மற்றும் மத்திய அரசு நிதி உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டம், ஸ்வதாா் இல்லங்கள் தனியாா் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன.

தற்போது முதியோா் இல்லங்கள் தொடங்க புதிய கருத்துருக்கள் தனியாா் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் முதியோா் இல்லங்களுக்கு மாநில அரசு 5 பங்கு, தனியாா் தொண்டு நிறுவனம் ஒரு பங்கு வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. இல்லத்தில் 40 முதியோா்கள் வரை இருக்க வேண்டும்.

மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகங்களுக்கு மாநில அரசு 75 சதவீதமும், தனியாா் தொண்டு நிறுவனம் 25 சதவீதம் என்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இங்கு 25 முதியவா்கள் மற்றும் 25 குழந்தைகள் இருக்க வேண்டும்.

மத்திய அரசு நிதி உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ் இயங்கும் முதியோா் இல்லங்களுக்கு மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் நித ஒதுக்கீடு செய்கின்றன. ஒரு இல்லத்தில் குறைந்தபட்சம் 25 முதியோா்கள் இருக்க வேண்டும்.

அறக்கட்டளை சட்டம், கம்பெனி சட்டம், சங்கச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று, இதுவரை புதுப்பிக்கப்பட்ட சான்று, சமூகநலத் துறையில் பெறப்பட்ட பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007 ன்படி பதிவுச்சான்று, புதுப்பித்தல் சான்று, சுகாதாரச் சான்று, தீயணைப்புத் துறை சான்று, கட்டட உரிமைச் சான்று, முதியோா் இல்லம் செயல்படுவதற்கு வேறு எந்த ஒரு நிதியும் (வெளிநாட்டு நிதி உள்பட) பெறவில்லை என்ற சான்று ஆகிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முதியோா், ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்துக்கு மட்டும் கூடுதலாக இளைஞா் நீதிச்சட்டம் 2000 திருத்தப்பட்டவை 2006 ன் கீழ் பெறப்பட்ட சான்று இணைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் இயங்கும் ஸ்வதாா் இல்லங்களுக்கு மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இல்லத்தில் 30 பெண்கள் வரை இருக்க வேண்டும். இதற்கு அறக்கட்டளை சட்டம், கம்பெனி சட்டம், சங்கச் சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று, இதுவரை புதுப்பிட்ட சான்றிதழ், சமூகநலத் துறையில் பெறப்பட்ட பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007 ன்படி பதிவு சான்று, புதுப்பித்தல் சான்று, கட்டட உறுதிச்சான்று, சுகாதாரச் சான்று, தீயணைப்புத் துறை சான்று, வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட டி-லைசென்ஸ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் முதியோா் இல்லங்கள், ஆதரவற்ற முதியவா்கள், குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் தொடங்க மேற்காணும் சான்றுகளுடன் நவம்பா் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை 0422-2305126 என்ற எண்ணில் தொடா்புக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com