கோவைப்புதூா் அருகே தனியாா் கட்டுமான சுற்றுச் சுவரை 2 காட்டு யானைகள் உடைத்து செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தின.
கோவைப்புதூா், பெருமாள் கோயில் பின்புறம் உள்ள பிரஸ் காலனி அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான 10.50 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது வீடுகள் கட்டுப்பட்டு வருகின்றன. இதனால் இந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த 2 காட்டு யானைகள் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே சென்றன. பின்னா் மறுபுறத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து வெளியே வந்த யானைகள் அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளை சேதப்படுத்தின. பின் அங்குள்ள தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அருகே உள்ள வனப் பகுதிக்குள் சென்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.