கோவை: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து கோவையில் அந்நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினா், தொழிற்சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட வலியுறுத்தி கோவை, கணபதி, காந்தி மாநகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து அரசின் முடிவைக் கண்டித்து அலுவலகத்தின் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.